சிங்கப்பூர் மூத்தோரிடையே உடல் வலிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகள் அண்மைக் காலத்தில் பிரபலமடைந்து வருகின்றன.
நடமாட்டத்திற்குத் தேவையான உறுதி, தன்னம்பிக்கை ஆகியவற்றை வலுப்படுத்திக்கொள்ள மூத்தோர் பலர் உடல் வலிமை உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
ஸ்போர்ட்ஸ்எஸ்ஜி இயக்கத்தின் கால்ம் (CALM) திட்டம், ஜிம் டானிக் (Gym Tonic) ஆகிய திட்டங்களில் மூத்தோர் பலர் இணைகின்றனர்.
சிங்கப்பூரில் உள்ள மூத்தோர் பலர் கடந்த சில ஆண்டுகளில் உடலுறுதியையும் உடல் வலிமையையும் வலுப்படுத்தும் பயிற்சிகளை அதிகம் நாடிச் செல்வதாக ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் பராமரிப்புக் கட்டமைப்புகள் பிரிவின் தலைவர் திரு டான் லியோங் பூன் குறிப்பிட்டார்.
ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பின் துடிப்பான சுகாதார இயக்கம் 132 துடிப்பான மூப்படைதல் நிலையங்களில் தசை வலிமை பயிற்சிகளை நடத்துகிறது.
எட்டு வாரங்கள் நீடிக்கும் அந்தத் திட்டத்தில் மூத்தோரின் உடல்நலம் மதிப்பிடப்படுவதுடன் ஆரோக்கிய உணவு குறித்தும் உடலுறுதிப் பயிற்சிகள் குறித்தும் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட அந்தத் திட்டத்தில் தற்போது 4,000 மூத்தோர் பங்கேற்றுள்ளனர். அதையடுத்து இவ்வாண்டு இறுதிக்குள் 180 துடிப்பான மூப்படைதல் நிலையத்திற்கு ஸ்போர்ட்ஸ்எஸ்ஜி தனது திட்டத்தை விரிவுபடுத்தவிருக்கிறது.
இந்நிலையில் உடலுறுதிப் பயிற்சிகளை மேற்கொள்ள தீவெங்கும் உள்ள 30 சமூக ஜிம் டோனிக் திட்டத்தில் இணைய 2,700க்கும் அதிகமான மூத்தோர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு 1,000ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
லியென் அறக்கட்டளை, 2015ஆம் ஆண்டு தொடங்கிய அந்தச் சமூகத் திட்டத்தில் வாரத்திற்கு இரண்டு முறை என 12 வாரங்களுக்கு உடலுறுதியை வலுப்படுத்தும் பயிற்சிகள் மூத்தோருக்கு வழங்கப்படுகிறது.
அந்தத் திட்டத்தில் தற்போது 3,200க்கும் அதிகமான மூத்தோர் இணைந்துள்ளனர். இவ்வாண்டுக்குள் 6,300க்கும் அதிகமான மூத்தோருக்குத் திட்டம் சேவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், என்டியுசி ஹெல்த் அமைப்பு, மூத்தோருக்கான ஏழாவது உடற்பயிற்சிக் கூடத்தை இந்த ஆண்டு திறக்கவிருக்கிறது.

