சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு காளிமுத்து ரமேஷ், திரு ஊமைத்துரை திலிபன் என்ற இரு வெளிநாட்டு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் ஆல்ரவுண்டர்களாக எதிர்வரும் ஆசிய ஆண்கள் கிரிக்கெட் பிரிமியர் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூருக்காக விளையாட உள்ளார்கள்.
செவ்வாய்க்கிழமையன்று சிங்கப்பூர் தேசிய அணிக்குத் தேர்வான தகவல் கிட்டியதும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்ததாக தமிழ் முரசிடம் தெரிவித்தார் இராமநாதபுர மாவட்டம், கீழ்க்குடியைச் சேர்ந்த திரு ரமேஷ்.
கடந்த வாரம் முதல் பயிற்சி சுற்றுக்கு அழைக்கப்பட்டிருந்த இவர், அரை நம்பிக்கையே கொண்டிருந்ததாகவும் தாம் உட்பட குடும்பத்தார் அனைவருக்கும் இது பெருமை தேடித் தந்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பதின்ம வயது முதல் கிரிக்கெட் மட்டையை ஏந்தத் தொடங்கிய திரு ரமேஷ், சொந்த நாடான இந்தியாவுக்காக விளையாட 2006ல் எடுத்த முயற்சி ஈடேறவில்லை. சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் பெரும் வாய்ப்பு கிட்டியதன்மூலம் தமது வாழ்க்கை இலட்சியம் நிறைவேறி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“எவ்வித முறையான பயிற்சியும் நான் மேற்கொண்டதில்லை. பொழுதுபோக்குக்காக மட்டுமேகிரிக்கெட் எனச் சோர்ந்துபோன எனக்கு சிங்கப்பூர் பல்வேறு வாய்ப்புகளை அளித்துள்ளது. எனது திறமையை நிரூபிக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது,” என்றார் திட்ட நிர்வாகியாகப் பணிபுரிந்துவரும் 33 வயது ரமேஷ்.
கடந்த ஓராண்டாக தேசிய அணியுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டுவரும் திரு திலிபன், 29, எதிர்வரும் ஆசிய ஆண்கள் பிரிமியர் கிண்ணப் போட்டியில் ஓரணியாகச் சேர்ந்து எதிரணிகளை வீழ்த்தும் முனைப்பில் உள்ளார்.
திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டையைச் சேர்ந்த திரு திலிபன், மாலை எட்டு மணிவரை நீடிக்கும் பணிச்சுமைக்கிடையே, வாரம் நான்கு முறை இரவு நேரத்தில் பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கி வருகிறார்.
வரும் வாரங்களில் ஹாங்காங், ஐக்கிய அரபு சிற்றரசுகள் (யுஏஇ), பஹ்ரேன், குவைத் ஆகிய அணிகளை சிங்கப்பூர் களத்தில் சந்திக்கும்.
ஹாங்காங்கும் ‘யுஏஇ’யும் கடும் போட்டி தரக்கூடும் என எதிர்பார்க்கும் திரு திலிபன், இருந்தாலும் இவ்வாய்ப்பை முழுதாகப் பயன்படுத்தி, திறம்படச் செயல்படுவதற்குத் தம்மாலான வரையில் முயற்சி செய்யவிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
திரு ரமேஷின் அர்ப்பணிப்பையும் கடும் உழைப்பையும் கடந்த மூன்றாண்டுகளாக கண்டுள்ள மில்லெனியம் யுனைடெட் கிரிக்கெட் குழுவின் திரு சுவாமிராஜன் சக்திதரன், தேசிய அணிக்கு அவர் தேர்வானதில் தமது குழு பெருமைகொள்வதாகத் தெரிவித்தார்.
“குழுவிற்கு அவர் பெரிய பலம். பந்துவீச்சில் மட்டுமின்றி, பந்தடிப்பிலும் அவர் வல்லவர். அவரின் பந்துவீச்சில் ஓட்டம் சேர்க்க பலரும் சிரமப்படுவர்,” என்றார் திரு சக்திதரன்.
கடந்த ஆண்டு உடலுறுதியை முன்னிலைப்படுத்தி, ஓட்டப் பயிற்சி, கட்டுப்பாடான உணவுமுறை வாயிலாக, திரு ரமேஷ் பத்து கிலோ எடை குறைத்ததையும் அவர் குறிப்பிட்டுப் பாராட்டினார்.