மற்றோர் அதிகாரியை நோக்கி துப்பாக்கியை நீட்டியதாக ஏத்தோஸ் (Aetos) காவற்படை அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
முஹம்மது நூரர்மான் ஷா அன்வார் எனப்படும் அந்த சிங்கப்பூரர், என்ன காரணத்துக்காக, தோட்டாக்கள் நிரம்பிய துப்பாக்கியை எடுத்து நீட்டினார் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் விளக்கவில்லை.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் செப்டம்பர் 28ஆம் தேதி அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சக அதிகாரியான முஹம்மது அமாலி அப்துல் ஹாலிமின் உயிருக்கு ஆபத்தான முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது புதன்கிழமை (அக்டோபர் 2) குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும், சோதனைச்சாவடியில் சட்டவிரோதமாக கைப்பேசியில் படம் பிடித்ததாக அந்த இரு அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இருவரின் வயது 23.
உள்கட்டமைப்புப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர்.
அந்த இரு அதிகாரிகளையும் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் ஏத்தோஸ் கூறியது.
துப்பாக்கி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சாதனங்கள் தொடர்பான கடுமையான விதிமுறைகள் மீறப்படுவதை ஏத்தோஸ் பொறுத்துக்கொள்ளாது என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கு மீண்டும் அக்டோபர் 15ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மற்றவரின் உயிருக்கு ஆபத்தான முறையில் நடந்துகொள்ளும் குற்றத்துக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத் தண்டனையும் $2,500 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.