இயற்கை வளங்களைத் துரிதமான முறையில் நிர்வகிப்பது வளங்கள் பற்றாக்குறையைக் குறைக்கவும் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உதவும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் ஸ்லோவேனியா, கார்போ தெர்டே, கோஸ்டா ரிக்கா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் நவம்பர் 11ஆம் தேதியன்று தெரிவித்தனர்.
அஸர்பைஜான் தலைநகர் பாக்கூவில் நடைபெற்று வரும் ஐநா பருவநிலை மாநாட்டில் அவர்கள் இவ்வாறு கூறினர்.
ஆறு நாடுகளைக் கொண்ட பசுமைக் குழுவில் இவர்கள் இடம்பெறுகிறார்.
இக்குழுவில் ஐஸ்லாந்தும் அங்கம் வகிக்கிறது.
பசுமைத் திட்டங்களையும் அனைத்துலக உறவுகளில் தீர்வுகளையும் மேம்படுத்துவதே இக்குழுவின் இலக்கு.
“ஒருங்கிணைக்கப்பட்ட, தீர்க்கமான முடிவைக் கொண்ட உலகளாவிய நடவடிக்கை இல்லாவிடில், மோசமடையும் வளங்கள் பற்றாக்குறை மற்றும் சுற்றுப்புறப் பாதிப்புகளால் நெருக்கடிநிலைகள் ஏற்பட்டு போர்கள் வெடிக்கக்கூடும்,” என்று டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் அக்குழுவைச் சேர்ந்த மற்ற நான்கு வெளியுறவு அமைச்சர்களும் தெரிவித்தனர்.
நாடுகளுக்கு இடையே பிரச்சினை ஏற்படுவதில் தண்ணீரும் ஒரு காரணமாக இருப்பதை அவர்கள் சுட்டினர்.
தண்ணீர் போன்ற முக்கிய வளங்கள் அனைவருக்கும் நியாயமான வகையில் கிடைப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

