லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து திரு எஸ். ஈஸ்வரன் விலகினார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பிரான அவர், தமது எம்.பி. பதவியிலிருந்தும் மக்கள் செயல் கட்சியிலிருந்தும் விலகினார்.
மேலும், கடந்த 2023 ஜூலை மாதம் லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் விசாரணை தொடங்கியதிலிருந்து அமைச்சராகத் தாம் பெற்ற சம்பளத்தையும் எம்.பி.யாக தாம் பெற்ற படித்தொகையையும் அவர் திருப்பிச் செலுத்துவார்.
பிரதமர் லீ சியன் லூங் வியாழக்கிழமை (ஜனவரி 18) இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2023 ஜூலை 11ஆம் தேதியிலிருந்து அமைச்சர் ஈஸ்வரன் விடுப்பில் இருந்து வருகிறார்.
இதனிடையே, தற்காலிகப் போக்குவரத்து அமைச்சரான சீ ஹொங் டாட், திரு ஈஸ்வரனுக்குப் பதில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் செயல்படுவார்.
முன்னதாக, வியாழக்கிழமை காலை திரு ஈஸ்வரன் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவர் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 27 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.