கடந்த ஆகஸ்ட் மாதம் சாங்கி விமான நிலையத்தில் இத்தாலிய நீச்சல் வீராங்கனைகள் இருவர் திருட்டுச் செயலில் ஈடுபட்டனர்.
அந்த விவகாரம் தொடர்பில் நடந்த சட்டரீதியான நடவடிக்கையின் முடிவைத் தீர்மானிப்பதில் அரசதந்திரத் தலையீடு ஏதும் இல்லை என்று உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (செப்டம்பர் 24) நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சியாரா டரான்டினோ, 22, பெனெடெட்டா பிலாட்டோ, 20, ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய 12 மாத எச்சரிக்கை சரியான தீர்ப்பு என்று காவல்துறையும் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகமும் தீர்மானித்தன. கடை ஒன்றில் கட்டணம் செலுத்தாமல் அவர்கள் வாசனைத் திரவங்களை எடுத்தது கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.
இருவரும் மீண்டும் சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் கடையில் திருடியதற்கு இருவருக்கும் ஏன் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது என்று அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியம் எழுப்பிய கேள்விக்கு திரு சண்முகம் பதிலளித்தார்.
சிங்கப்பூரில் நடந்த உலக நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை டரான்டினோ, பிலாட்டோ இருவரும் பங்கேற்றிருந்தனர்.