சிங்கப்பூருக்குள் வெளிநாட்டவர்கள் மூவர் கள்ளத்தனமாக நுழைய உதவி செய்த ஆடவருக்கு புதன்கிழமை (டிசம்பர் 17) எட்டு மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
ஒரு நபருக்கு 1.5 மில்லியன் ரூப்பியா (S$115) எனப் பணம் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இழுவைப் படகு ஊழியரான ஃபெப்ரி இஸ்வாந்தோ, 23, அந்த வெளிநாட்டவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய உதவ இணக்கம் தெரிவித்தார்.
அந்தச் செயல் குற்றம் என்று தெரிந்தபோதும், தமக்குப் பணம் தேவைப்பட்டதால் இதற்கு ஒப்புக்கொண்டார்.
இந்தோனீசியரான ஃபெப்ரிக்கு கடைசியில் 1 மில்லியன் ரூப்பியா மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்நிலையில், மூன்று வெளிநாட்டவர்கள் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய உதவிய குற்றத்தை அவர் முன்னதாக ஒப்புக்கொண்டார்.
ஃபெப்ரிமீது நவம்பர் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நவம்பர் 9ஆம் தேதி புலாவ் பொங்கோல் முனையத்தில் கடலோரக் காவற்படை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ஃபெப்ரி உள்ளிட்ட எட்டு வெளிநாட்டுப் படகு ஊழியர்கள் பிடிபட்டனர்.
அப்போது நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஃபெப்ரி அக்டோபர் 26ஆம் தேதி சிங்கப்பூருக்குள் மூவரைக் கள்ளத்தனமாகக் கொண்டுவந்தது தெரியவந்தது.

