கோலாலம்பூரில் மோசடிக் கும்பல் ஒன்றின் அலுவலகத்தைப் பராமரித்ததோடு, கணினிச் சேவையகங்கள் பலவற்றின் கட்டணங்களைச் செலுத்தி வந்த 25 வயது ஆடவருக்குத் திங்கட்கிழமை (மே 25) ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லாவ் சுன் கியாட் என்பவரின் இத்தகைய செயல்களால் சிங்கப்பூரில் குறைந்தது 129 பேர் பாதிக்கப்பட்டு, 3 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் ரகசியமாக ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அதிநவீன தீங்கு நிரலைப் பயன்படுத்திய மோசடியில் இவருக்குத் தொடர்பு இருந்தது.
இந்தத் தீங்கு நிரல், பாதிக்கப்பட்டவர்களின் கைப்பேசிகளையும் வங்கிச் சேவைகள் உள்ளிட்ட பிற செயலிகளையும் அந்த மோசடிக் கும்பல் கட்டுப்படுத்த வழிவகை செய்தது.
சிங்கப்பூருடன் தொடர்புடைய திட்டமிடப்பட்ட குற்றச்செயல் கும்பல் ஒன்றில் உறுப்பினராக இருந்ததற்கும் தீங்கு நிரலைப் பயன்படுத்திப் பிற சாதனங்களைக் கட்டுப்படுத்தச் சதி செய்ததற்கும் லாவ்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தன் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
மலேசியக் குடிமகனான லாவ், கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில், லீ ரோங் டெங் என்ற தைவான் நாட்டு ஆடவரால் கோலாலம்பூரில் மோசடிக் கும்பலின் அலுவலகத்தைப் பராமரிக்கும் பணிக்காக வேலைக்கு அமர்த்தப்பட்டார் என்று நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
மோசடிக்குக் காரணமான லீ இன்னும் தலைமறைவாக உள்ளார்.

