முதியவர் ஒருவரை இடித்துக் கீழே தள்ளி பலத்த காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காகச் சிறப்புத் தேவையுடைய லூயி காய் யேக்கு எட்டு மாதம் ஒரு வாரச் சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) விதிக்கப்பட்டது.
மதியிறுக்கப் பிரச்சினை (ஆட்டிசம்), இருமனக் குழப்பம் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட 37 வயதான லூயிக்கு $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
லூயி தள்ளியதில் கீழே விழுந்த அந்த 76 வயதான முதியவர் தலையில் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ‘கோமா’ நிலைக்குச் சென்று பின்னர் உயிரிழந்தார்.
2023ஆம் ஆண்டுச் செப்டம்பர் 5ஆம் தேதி நண்பகல் வேளையில் இச்சம்பவம் நடந்தது. புளோக் 101, தெம்பனிஸ் அவென்யூ 2க்கு அருகே பேருந்தைப் பிடிக்க வேகமாக லூயி ஓடியபோது தமக்கு எதிரே வந்த முதியவரை கவனிக்காமல் அவரை இடித்துக் கீழே தள்ளினார்.
மேலும் கீழே விழுந்த முதியவருக்கு உதவுவதற்குப் பதிலாக, லூயி பேருந்தில் ஏறி சென்று விட்டார்.
தன்மீது சுமத்தப்பட்ட மூர்க்கத்தனமாக நடந்து கொண்டு வேறொருவருக்குக் கடுமையான காயம் விளைவித்த குற்றச்சாட்டு, மானபங்கக் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை லூயி கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.