சிவப்பு சமிக்ஞையில் நிற்காமல் சென்று மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மீது மோதிய ஓட்டுநருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனை மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கேற்ப சிறைத் தண்டனை அதிகரிக்கப்பட்டது.
51 வயது ஜான்சன் டான் வீ கியெட்டுக்கு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.
அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர் நீதிமன்றம் மறுத்தது. சிறைத் தண்டனை மூன்று வாரங்களுக்கு அதிகரிக்கப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்கு எல்லா வகையான ஓட்டுநர் உரிமங்களையும் வைத்துக்கொள்ள ஜான்சன் டானுக்குத் தடையும் விதிக்கப்பட்டது.
சமிக்ஞை விளக்கு சிவப்பாக மாறிய பிறகு அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்கப் போதுமான அவகாசம் (ஐந்து வினாடிகள்) இருந்ததாக நீதிபதி கிறிஸ்டஃபர் டான் கூறினார். அதனால் ஓட்டுநருக்கு மேலும் கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பதை நீதிபதி ஒப்புக்கொண்டார்.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி அலெக்சாண்டிரா ரோட்டை நோக்கிய கேஞ்சஸ் அவென்யூவில் ஜான்சன் டான் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. கேஞ்சஸ் அவென்யூவிலிருந்து டெல்டா ரோட்டுக்குள் திரும்பும்போது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மீது அவர் மோதினார். அந்த மோட்டார் சைக்கிளோட்டி காயமடைந்தார்.
ஜான்சன் டான் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவி அவரை சாலைத் தடத்துக்கு அருகே அமர வைத்தார். பிறகு காவல்துறைக்கும் அவசர மருத்துவ உதவிச் சேவைக்கும் விபத்து குறித்து தகவல் தெரிவித்தார்.

