சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்பது நம் அனைவரது கூட்டுப் பொறுப்பு என்பதை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி வலியுறுத்தியுள்ளார்.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது நாம் உருவாக்க முயலும் ‘நாம் முதன்மையான சமூகம்’ என்பதன் ஒரு பகுதியாகும்,” என்று அவர் கூறினார்.
‘சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்போம்’ இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது டாக்டர் ஜனில் அவ்வாறு கூறினார்.
வியாழக்கிழமை (மே 14) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துப் பயணிகளின் அன்றாட அனுபவத்தை மேம்படுத்தும் முத்தரப்புப் பங்காளித்துவம் கையெழுத்திடப்பட்டது.
பொதுப் போக்குவரத்து மையங்களில் தூய்மைத் தரத்தை அடுத்தகட்டத்திற்கு உயர்த்த பொதுச் சுகாதார மன்றம், எஸ்பிஎஸ் டிரான்சிட், ஸ்பெக்கோ ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
எஸ்பிஎஸ் டிரான்சிட்டைச் சேர்ந்த ஏறத்தாழ 35 ஊழியர்கள் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணியை முன்னின்று ஒருங்கிணைத்த எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் மின்னிலக்க செயற்கை நுண்ணறிவு அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த மேலாளராக தன்ராஜ் ராஜேந்திரன், 35, தூய்மை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க தங்களால் இயன்றவற்றைச் செய்து வருவதாகக் கூறினார்.
“நாட்டை நமது வீடாக நினைத்து அதனைப் பராமரிக்க வேண்டும். தூய்மை அனைவரது பொறுப்பு என்பதால் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பொதுத்துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பைக் கண்டு தாம் மனம் நெகிழ்ந்ததாக லிட்டில் இந்தியா பூக்கடைக்காரரான ராமசந்திரன் கண்ணகி, 52, தெரிவித்தார்.
“நம் வீட்டை எப்படிச் சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அதேபோல பொது இடங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்,” என்று பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பல ஆண்டுகளாகத் தூய்மைப் பணிகளுக்குப் பங்களித்த பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உழைப்பைப் போற்றும் வகையில், கலைநயம் மிக்க புதிய சமூகச் சுவரோவியம் ஒன்று லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவோரை நல்வழிப்படுத்த ரயில் நிலையக் கழிப்பறைகளில் தூய்மையைக் கடைப்பிடிக்க நினைவுறுத்தும் தானியங்கி இசையுடன் கூடிய அறிவிப்புகளை ஒலிக்கச் செய்ய ‘அக்கம்பக்கக் கழிப்பறை சமூகக் குழு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுச் சுகாதார மன்றத்தின் இணைப் பேராசிரியர், நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லியூ, “சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்பது கூட்டுப் பொறுப்பு என்பதைப் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்,” என்று கூறினார்.
இத்தகைய நவீன முயற்சிகள், மக்களின் நற்பழக்கங்களை மேலும் ஊக்குவிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

