ஜோகூர் பாருவில் நடந்த கொலை தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஒரு சிங்கப்பூரர் என்று நம்பப்படுகிறது. அந்த 30 வயது ஆடவர், அண்டை நாடு ஒன்றின் உதவியோடு கைது செய்யப்பட்டதாக ஜோகூர் துணை காவல்துறைத் தலைவர் ஹூ சுவான் ஹுவாட் கூறினார்.
“இதற்கு முன்பு ஒரு பெண் உட்பட ஐவரை நாங்கள் கைது செய்திருந்தோம். பிறகு புதன்கிழமை (மார்ச் 25) அண்டை நாட்டுக் காவல்துறையின் உதவியோடு மேலும் ஒரு சந்தேக நபரைக் கைது செய்தோம்.
“தடுப்பாணை பெறுவதற்காக அவர் வியாழக்கிழமை (மார்ச் 26) ஜோகூர் நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்,” என்று திரு ஹூ செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். காவல்துறை தினக் கொண்டாட்டத்துக்குப் பிறகு அந்தச் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.
கொலைக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
முன்னதாகக் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரின் தடுப்பாணை செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) காலாவதியானதாகவும் அது இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

