ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வரிச் சலுகைகளை மலேசியா அறிமுகப்படுத்தியுள்ளது.
உயர் மதிப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் 5 விழுக்காடு வரி விகிதம் இதில் அடங்கும்.
இந்த 15 ஆண்டு சிறப்பு வரி விகிதம், குறிப்பிட்ட சில உற்பத்தி, சேவை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உரியது என்று நிதி அமைச்சும் ஜோகூர் அரசாங்கமும் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு, மருத்துவச் சாதனங்கள் போன்றவை இதில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் பணியாற்றும் நிபுணர்களுக்கு 15 விழுக்காடு வருமான வரி விதிக்கப்படும்.
இந்த வரிச் சலுகைகள் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து பொழுதுபோக்கு அம்சங்கள் சார்ந்த வரிகளை ஜோகூர் மாநில அரசாங்கம் குறைத்துள்ளது.
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் தென்பகுதியில் 3,571 சதுர மீட்டர் பரப்பளவில் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் அமைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது சிங்கப்பூரின் பரப்பளவைவிட நான்கு மடங்கு பெரிது.
சிறப்புப் பொருளியல் மண்டலம் ஜோகூர் பாரு நகர மையம், இஸ்கந்தர் புத்ரி, ஃபாரஸ்ட் சிட்டி, பெங்கராங் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோலியம் வளாகம், தஞ்சோங் பெலேபாஸ்-தஞ்சோங் பின், பாசிர் குடாங், செனாய்-ஸ்கூடாய், செடெனாக், டிசாரு என ஒன்பது முக்கிய உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
“மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பு உள்ளது. இதை அடித்தளமாகக் கொண்டு ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வண்ணம் சிறப்புச் சலுகைகளைக் கொண்ட தொகுப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உயர் வருமானப் பணிகள் உருவாக்கப்படும்,” என்று மலேசியாவின் நிதி இரண்டாம் அமைச்சர் அமீர் ஹம்சா அஸிஸான் தெரிவித்தார்.