ஜோர்டானின் பட்டத்து இளவரசர் இரண்டாம் அல் ஹுசைன் அப்துல்லா, பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பில் சிங்கப்பூருக்குத் தமது முதல் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
ஜனவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையிலான தமது பயணத்தின்போது ஜோர்டான் பட்டத்து இளவரசர் சிங்கப்பூர் தலைவர்கள் பலரைச் சந்திப்பார் என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
மேலும், பிரதமர் லீ அவருக்கு அதிகாரபூர்வ விருந்தளித்துச் சிறப்பிப்பார்.
அத்துடன், அவர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கையும் மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியனையும் சந்திப்பார்.
அதனைத் தொடர்ந்து, இளவரசர் ஹுசைன் தொழில்நுட்பக் கல்வி கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளிக்குச் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்பள்ளியில், மனிதவள முதலீட்டு வளர்ச்சிக்கான ஒத்துழைப்பைப் பற்றிக் கலந்துரையாடுவார் என்றும் கூறப்பட்டது.
பட்டத்து இளவரசருடன் அவரின் மனைவியும் இளவரசியுமான ராஜ்வா அல் ஹுசைன் மற்றும் ஜோர்டானின் துணைப் பிரதமர் உட்பட அந்நாட்டு அமைச்சர்கள் சிலரும் இணைந்து சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

