மலையேறும் அனுபவம் வழங்கும் ஏறுசுவர், மட்டை விளையாட்டு மைதானங்கள், உடல்நலன் சார் நடவடிக்கைகளுக்கான திட்டங்களுடன் காலாங் வேவ் கடைத்தொகுதி 2028ஆம் ஆண்டுக்குள் பிரம்மாண்டமாகப் புதுப்பிக்கப்படவுள்ளது.
மேற்கூரையுடன் அமைந்த பல வித மட்டை விளையாட்டுகளுக்கான ஆறு மைதானங்கள், தென்கிழக்காசியாவிலேயே ஆக உயரமான 21 மீட்டர் ஏறுசுவர், குளிர்ந்த நீரில் நீராடுவதற்கும் குதித்து விளையாடுவதற்குமான வசதிகள் நிறைந்த இடமாகக் கடைத்தொகுதி உருமாற்றம் காணவுள்ளது.
அதன்படி இவ்வாண்டு மே மாதம் அதற்கான பெரும்பணிகள் தொடங்கவிருக்கின்றன. புதிய வடிவமைப்புடன் பல கவர்ச்சியான வாழ்க்கைமுறை நலத் திட்டங்களை அங்கு அனைவரும் அனுபவிக்கும் விதமாக கடைத்தொகுதி எதிர்காலத்தில் அமையும்.
சில்லறை வர்த்தகத்துடன் விளையாட்டுகளையும் நாவுக்கினிய உணவுகளின் சுவைகளையும் பல இனிய வாழ்நாள் அனுபவங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரே இடமாக கடைத்தொகுதியை உருவாக்கும் பணிகள் தொடங்கவுள்ளதால், சில வசதிகள் அங்கு தற்காலிகமாக மூடப்படும்.
கடைத்தொகுதி முழுமையாக மூடப்படாமல் பகுதிகள் வாரியாக 2028ஆம் ஆண்டு வரையில் அவ்விடம் படிப்படியாக மறுவடிவமைக்கப்படும்.
அருகில் உள்ள தேசிய விளையாட்டரங்கின் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமையும் வண்ணம் சைக்கிளோட்டம், மெதுவோட்டம், உடற்பயிற்சி நிலையம், குடும்ப விளையாட்டுகள் என பல நடவடிக்கைகளுக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இயற்கையுடன் அங்குள்ள நீர் வளங்களையும் இணைக்கும் விதமாக காலாங் பேசின் பூங்காவுக்கு இணைப்பும் ஏற்படுத்தப்படும்.
தற்போது மூடப்பட்டுள்ள விளையாட்டு அருங்காட்சியகம் 2027ஆம் ஆண்டில் மறுவடிவமைக்கப்பட்டு திறந்தவுடன் காலாங் வேவ் புத்துயிர் பெற்று சிறப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேல் விவரங்களுக்கு The Kallang’s website இணையப் பக்கத்தைப் பார்க்கலாம்.

