கவிதை வாசிப்பு என்றாலே நான்கு சுவர்களுக்குள் அமர்ந்தவாறே நடத்தப்படும் ஒன்று என்ற பிம்பத்திலிருந்து வேறுபட்டு, வெளிப்புறத்தில் நடைபெற்ற துடிப்புமிக்க ஒன்றுகூடலைக் கவிமாலை அமைப்பு நடத்தியுள்ளது.
‘கடற்கரைச்சாலை கவிநடை’ என்னும் அந்த நிகழ்ச்சி, கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5) ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், வாசகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தொடக்கக்கல்லூரி மாணவர்கள் எனக் கிட்டத்தட்ட 55 பேர் கலந்துகொண்டனர்.
சமூக மன்றங்கள், இந்திய நற்பணிச் செயற்குழுக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த புதிய பங்கேற்பாளர்களும் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.
உடற்பயிற்சியையும் இலக்கியத்தையும் இணைக்கும் விதமாக, பங்கேற்பாளர்கள் அனைவரும் முதலில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்தனர்.
நடைப் பயிற்சியைத் தொடர்ந்து, திறந்தவெளியில் மிகவும் இயல்பான சூழலில் கவிதை வாசிப்பும் கலந்துரையாடலும் நடைபெற்றன.
“கவிதை நிகழ்ச்சிகள் உயர்ந்த மொழிநடை சார்ந்தவை, அங்கே செல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது என்ற எண்ணத்தை மாற்றி, அனைவரையும் குடும்பம்போல ஒன்றிணைத்து உணர வைப்பதே எங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது,” எனக் கவிமாலையின் தலைவர் இன்பா கூறினார்.

