கிம் மோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார்நிறுத்தும் கட்டடத்திலிருந்து சட்டவிரோதமாக வாணவேடிக்கை வெள்ளிக்கிழமை இரவு (மார்ச் 20) நடத்தப்பட்டது.
அதனை விசாரித்து வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத வாணவேடிக்கை சம்பவத்தின் காணொளி இணையத்தில் பகிரப்பட்டது.
சமூக ஊடகத்தில் அதைப் பகிர்ந்த Eena_sg என்ற முகவரியுடைய பயனாளர் அந்தச் சம்பவம் 20 வினாடிகள் நீடித்ததாகக் குறிப்பிட்டார்.
“துப்பாக்கிச்சூடுபோல இரவு 11.14 மணிக்கு கேட்டது. வெள்ளிக்கிழமை இரவில் வாணவேடிக்கையா?” என்று அவர் ஆச்சரியத்துடன் டிக்டாக் பதிவில் தெரிவித்திருந்தார்.
அந்தக் காணொளியைக் கொண்டு பாதுகாப்பு கருதி காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு சிலர் அந்தப் பயனாளரிடம் கேட்டுக்கொண்டனர்.
அந்தப் பயனாளரின் சமூக ஊடகக் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.
ஏஷியாஒன் ஊடகத்தின் கேள்விக்குப் பதிலளித்த காவல்துறை, புளோக் 16A, கிம் மோ ரோடு முகவரியில் சம்பவம் நிகழ்ந்ததை உறுதிசெய்தது. யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
சட்டவிரோதமாக வாணவேடிக்கை நடத்துபவர்களுக்கு ஈராண்டுச் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


