விதிகளுக்கு இணங்காத தனிநபர் நடமாட்டச் சாதனங்களை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் அல்ஜுனிட்டில் உள்ள ஒரு கடையில் நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) திடீர் சோதனை நடத்தினர்.
இத்தகைய சாதனங்கள் தீ விபத்துகளில் சிக்கும் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்துள்ளது.
இந்தச் சோதனையை நேரடியாகக் காண ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு அழைக்கப்பட்டிருந்தது. இந்தச் சோதனையின் முடிவில் 11 சட்டவிரோத சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விதிகளுக்கு இணங்காத மின்சைக்கிள்களை விற்பனைக்கு வைத்திருந்தது உட்பட 19 குற்றங்களைச் அந்தக் கடை புரிந்துள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
2025 ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே, விதிகளுக்கு இணங்காத 600க்கும் மேற்பட்ட உந்து நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையம் செவ்வாய்க்கிழமை கூறியது.
இதே காலகட்டத்தில், சட்டவிரோத சாதனங்களை விற்பனை செய்த ஏழு கடைகள் ஆணையத்தின் சோதனைகளில் பிடிபட்டன. இந்த விற்பனையாளர்கள், விதிகளுக்கு இணங்காத சாதனங்களை விற்பனை செய்ததற்காக ஏறத்தாழ 30 குற்றங்களைச் புரிந்துள்ளனர் என்று ஆணையம் தெரிவித்தது.
சட்டவிரோத தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் ஆபத்தானவை என்று போக்குவரத்து துணை அமைச்சர் பே யாம் கெங் செவ்வாய்க்கிழமை தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
“இவை, வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. இவை, நம் அங்கம்பக்கப் பேட்டைகளுக்கு உண்மையான ஆபத்துகள். எனவே, சட்டவிரோத சாதனங்களின் விற்பனையையும் பயன்பாட்டையும் தடுப்பது அவசியம்,” என்றார் அவர்.