சிங்கப்பூரில் கடந்த ஆண்டு தீவிபத்துகளில் அதிகம் பேர் காயமடைந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு 80 பேர் தீவிபத்துகளில் காயமடைந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 94க்கு அதிகரித்ததாக அது புதன்கிழமை (பிப்ரவரி 11) கூறியது.
அதேபோல, தீயில் சிக்கிய மின்வாகனங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு அதிகரித்தது. 2024ஆம் ஆண்டு ஒரே ஒரு மின்வாகனம் தீயில் சிக்கிய நிலையில், கடந்த ஆண்டு நான்கு வாகனங்கள் எரிந்தன.
தீவு முழுவதும் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒட்டுமொத்த தீச்சம்பவங்களின் எண்ணிக்கை 2,050. அது அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் மூன்று விழுக்காடு அதிகம்.
அந்தத் தீ விபத்துகளில் 1,051 விபத்துகள் குடியிருப்புக் கட்டடங்களில் நிகழ்ந்தவை என்று எஸ்சிடிஎஃப் தனது வருடாந்திர புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

