சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15ஆம் தேதி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பதவியேற்பார் என்று பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 15ஆம் தேதி அறிவித்தது.
முதல் பிரதமர் லீ குவான் யூவிலிருந்து பிரதமர் கோ சோக் டோங் வரை; பிரதமர் கோவிடமிருந்து பிரதமர் லீ சியன் லூங் வரை; இப்போது, பிரதமர் லீயிடமிருந்து துணைப் பிரதமர் வோங் வரை, சிங்கப்பூர் அதன் அரசியல் தலைவர்களின் ஆட்சி மாற்றங்களை எவ்வாறு கையாண்டது என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆராய்கிறது.
லீ குவான் யூ - கோ சோக் டோங்
1984: பிரதமர் லீ குவான் யூ, தமக்கு 65 வயதாகும்போது 1988க்குள் பதவியை ஒப்படைக்கப்போவதாக அறிவித்தார்.
1988: செப்டம்பரில் நடந்த 1988 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, துணைப் பிரதமர் கோ தாம் பதவியேற்பதற்கு முன்னர், மேலும் ஈராண்டு கால அவகாசம் கேட்டுக்கொண்டார்.
நவம்பர் 28, 1990: திரு லீயும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி விலகினர். திரு கோ பிரதமராகப் பதவியேற்றார்.
கோ சோக் டோங் - லீ சியன் லூங்
ஆகஸ்ட் 17, 2003: பிரதமர் கோ அவரது தேசிய தினக் கூட்ட உரையின்போது துணைப் பிரதமர் லீ சியன் லூங்கை அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுத்திருப்பதை அறிவித்தார்.
மே 31, 2004: கட்சியின் மத்திய நிர்வாகக் குழு துணைப் பிரதமர் லீ அடுத்த பிரதமராவார் என்று மே 29ஆம் தேதி முடிவெடுத்ததாக மக்கள் செயல் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு முந்தைய நாள் சந்தித்து, துணைப் பிரதமர் லீ தெரிவுசெய்யப்பட்ட முடிவுக்கு ஒருமித்த ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.
ஆகஸ்ட் 10, 2004: பிரதமர் கோவும் துணைப் பிரதமர் லீ உள்ளிட்ட அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் அதிபர் எஸ் ஆர் நாதனிடம் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்தனர்.
ஆகஸ்ட் 12, 2004: திரு கோவின் பதவி விலகல் நடப்புக்கு வந்தது. பிரதமர் லீ பதவியேற்று அவரது முதல் உரையை ஆற்றினார்.
லீ சியன் லூங் - லாரன்ஸ் வோங்
ஜனவரி 4, 2018: தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு குறித்து தாங்கள் அறிந்துள்ளனர் என்றும் அதனைத் தகுந்த நேரத்தில் செய்ய குழுவாகச் செயல்படுகிறார்கள் என்றும் மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை அரசியல் குழுவைச் சேர்ந்த 16 அமைச்சர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
நவம்பர் 23, 2018: நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நான்காம் தலைமுறைக் குழுவை வழிநடத்த ஒருமித்த கருத்து நிலவுவதாக 32 அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.
ஏப்ரல் 8, 2021: துணைப் பிரதமர் ஹெங் நான்காம் தலைமுறைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
ஏப்ரல் 16, 2022: நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைக் குழுவின் தலைவராவார் என்று பிரதமர் லீ அறிவித்தார்.
ஜூன் 6, 2022: அமைச்சரவை மாற்றத்தின்போது, திரு வோங் துணைப் பிரதமரானார்.
நவம்பர் 5, 2023: 2025ஆம் ஆண்டு நவம்பருக்குள் நடைபெறவேண்டிய அடுத்த பொதுத் தேர்தலுக்குள், துணைப் பிரதமர் வோங்கிடம் அரசியல் பொறுப்பை ஒப்படைக்கப்போவதாகத் திரு லீ கூறினார்.
ஏப்ரல் 15, 2024: துணைப் பிரதமர் வோங், 2024ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பொறுப்பு ஏற்பார் என்று பிரதமர் லீ அறிவித்தார்.