அகலமான மிதிவண்டிப் பாதை அமைப்பதற்காக ஹவ்காங் அவென்யூ 2ல் இருந்த ஐந்து பெரிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. நன்கு வளர்ந்த, முதிர்ச்சியடைந்த மரங்கள் அவை என்று கடந்த திங்கட்கிழமை ஷின் மின் சீன நாளிதழ் தெரிவித்திருந்தது.
மேலும், அந்தப் பகுதியில் உருவாகிவரும் ‘த ஃபுளோரென்ஸ் ரெசிடென்சஸ்’ கூட்டுரிமை அடுக்குமாடிக் குடியிருப்பிற்குப் பின்புறம் மரங்கள் அகற்றப்பட்டதால் அந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுக்குக் குறைவான நிழலே கிடைப்பதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டு இருந்தது.
இது குறித்து தேசிய பூங்காக் கழகத்தின் சாலைவனப்புப் பிரிவின் குழு இயக்குநர் ஓ சியோவ் ஷெங் விளக்கினார்.
திட்டமிடப்பட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ஹவ்காங் அவென்யூ மற்றும் ஹவ்காங் அவென்யூ 10ல் சாலையோர மரங்களை அகற்ற சொத்து மேம்பாட்டாளர் அனுமதி கோரி இருந்ததாகவும் 2020 மார்ச்சில் அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“மேலும், இந்த மே மாதத்தில் ஃபுளோரென்ஸ் ரோட்டில் உள்ள மேலும் சில மரங்களை அகற்றும் புதிய யோசனையை மேம்பாட்டாளர் சமர்ப்பித்து இருந்தார். சைக்கிளோட்டப் பாதையை மேம்படுத்துவதோடு அதிக வெளிச்சமாகவும் இருக்க அந்த மரங்களை அகற்றுவது அதன் நோக்கங்கள்.
“வெட்டப்படவிருக்கும் மரங்கள் பற்றி குடியிருப்பாளர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் அவற்றில் குறிப்பு எழுதி ஒட்டப்பட்டிருந்தது,” என்றார் திரு ஓ.