ஆதாரங்களில் எது தனக்கும் தம் நண்பர்களுக்கும் சாதகமாக இருக்கும் எனப் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் லோ பெய் யிங் முடிவு செய்தது திரித்துக் காட்டுவதற்குச் சமம் என்று பிரித்தம் சிங் வழக்கின் ஐந்தாம் நாளில் தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமபோய் சாடினார்.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மீதான நீதிமன்ற விசாரணயின் ஐந்தாவது நாளான வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) விசாரணையின்போது திருவாட்டி லோ பெய் பிங், திரு ஜுமபோய் கூறியதைத் தொடக்கத்தில் மறுத்தபோதும் இறுதியில் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கின் தொடர்பில் சாட்சியாக விசாரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானின் உதவியாளராகத் திருவாட்டி லோ பணியாற்றியிருந்தார்.
நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரங்களில் தம் நண்பரும் முன்னாள் பாட்டாளிக் கட்சி உறுப்பினருமான யுதிஷ்த்ரா நாதன் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றை மூடி மறைத்தது தொடர்பில் தாம் பொய்யுரைத்ததை திருவாட்டி லோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமையன்று ஒப்புக்கொண்டார்.
நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவினருக்கு ஆதாரம் சமர்ப்பித்தபோது, மறைக்கப்பட்ட குறுஞ்செய்தி, சம்பந்தமில்லாத நாடாளுமன்ற உறுப்பினரைப் பற்றியது என திருவாட்டி லோ பொய்யாகக் கூறினார்.
திரு யுதிஷ்த்ரா அக்டோபர் 7ஆம் தேதி அனுப்பிய குறுந்தகவலில் “நாம் அவ்வளவு விவரங்களைக் கொடுத்திருக்கக்கூடாது. அதிகபட்சமாக (பாதிக்கப்பட்டவரின்) வயதைத் துல்லியமாகக் குறிப்பிடாததற்கு மன்னிப்பு கேளுங்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அது குறித்த இன்றைய விசாரணையில், குறுஞ்செய்திகள் மூடி மறைத்து திரித்துக் காட்டப்பட்டதா எனத் தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமபோய் கேட்டதற்கு, “இல்லை” என்று திருவாட்டி லோ கூறினார்.
“எந்த ஆதாரங்கள் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் சாதகமாக இருக்கும் என முடிவு செய்தது திரித்துக் கூறுவது இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா,” என வழக்கறிஞர் ஜுமபோய் வினவினார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் அதற்காக அதனை மறைக்கவில்லை,” என திருவாட்டி லோ பதிலளித்தார். ஆனால் வழக்கறிஞர் ஜுமபோய் இது பற்றி தொடர்ந்து கேள்வி கேட்டதற்கு முடிவில் அவரது கூற்றை திருவாட்டி லோ ஒப்புக்கொண்டார்.