முன்னாள் வழக்கறிஞர் எம்.ரவி, 56, புதன்கிழமை (டிசம்பர் 24) அதிகாலை சுயநினைவின்றி டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவரது வீட்டில் சுயநினைவு இழப்பதற்கு முன் அவருடன் இருந்த நண்பருடன் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக காவல்துறை விசாரணைக்குப் பிறகு தெரியவந்துள்ளது.
மருத்துவ உதவி வழங்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அந்த வீட்டுக்குச் சென்றபோது அங்கு எம்.ரவியின் நண்பர் ஒருவர் இருந்துள்ளார். அந்த நபர்தான் மருத்துவ உதவிக்கு அழைத்தவர்.
இருவரும் சிலமணி நேரத்துக்கு முன்பாக போதைப்பொருள் உட்கொண்டதாகவும், எம்.ரவி அதற்குப் பிறகு ஒருவித மயக்க நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் அந்த நண்பர் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
எம்.ரவிக்கு உடனடி வாய்வழி மூச்சுக்காற்று (சிபிஆர்) வழங்கியதாகவும் போதைப் பொருள் தமக்கே சொந்தமானது எனவும் அந்த நண்பர் காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) அந்த நண்பரை கைது செய்துள்ளது.
இந்த மரணத்தில் சூது எதுவும் இருப்பதாகச் சந்தேகிக்கவில்லை என்று விவரித்த காவல்துறை, விசாரணை தொடர்வதாகவும், உடற்கூராய்வு செய்த பிறகே மரணத்தின் முழு விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

