நினைவிழப்பு நோயுள்ள 97 வயது முதலாளியைத் துன்புறுத்திய குற்றத்திற்காக வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சித்தி நூர்ஹயாத்தி மார்வி அனிமான் எனப்படும் அந்தப் பணிப்பெண், சக்கர நாற்காலியில் நடமாடும் அந்த முதலாளியின் தலை, கண்கள், வயிறு, கை, கால்கள் ஆகியவற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவரின் கண்களில் குத்தியதாகவும் இறகுத் துடைப்பத்தால் தாக்கியதாகவும் சோஃபாவில் தூக்கி எறிந்ததாகவும் கூறப்பட்டது.
அத்துடன் முதலாளியின் பிறப்புறுப்பை இழுத்து கசக்கியதாகவும் அந்த 40 வயது இந்தோனீசிய பணிப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தமது தாத்தாவை அந்தப் பெண் துன்புறுத்துவதாகச் சந்தேகித்த அவரது பேரன், மறைவான இடங்களில் கேமராவை வைத்திருந்தார். பணிப்பெண் துன்புறுத்தும் செயல்கள் அதில் பதிவாயின.
கேமராவில் பதிவான காட்சிகள் சிலவற்றை நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் போட்டுக் காட்டியபோது அவற்றைக் கண்டு அந்தப் பணிப்பெண் அழுதார். அவர் சார்பாக யாரும் வாதாடவில்லை. குற்றங்களை ஒப்புக்கொண்ட அந்தப் பெண் செய்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.
கேமராவின் பதிவு எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் துன்புறுத்தல்கள் நடைபெற்றிருக்கலாம் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே, 22 மாதம் முதல் 26 மாதம் வரை அவருக்கு சிறைத் தண்டனை விதிக்குமாறு வழக்கறிஞர் கோரினார்.

