மோசடி: பொய்முடியுடன் அரசாங்க அதிகாரிபோல் நடித்ததாக நம்பப்படும் மலேசியர்

மோசடி: பொய்முடியுடன் அரசாங்க அதிகாரிபோல் நடித்ததாக நம்பப்படும் மலேசியர்

2 mins read
db15d2ed-5072-41f2-b426-dd8e3fc2f8f7
சந்தேக நபர் போலி நிறுவன அடையாள அட்டையை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: சிங்கப்பூர் காவற்படை
Google News Preferred Icon

அரசாங்க அதிகாரியைப்போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் மலேசிய ஆடவர்மீது சனிக்கிழமை (மே 2) குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த 40 வயது ஆடவர், ரொக்கம், தங்கம் உள்ளிட்டவற்றைப் பிறரிடமிருந்து பெற்று சரியான இடத்தில் ஒப்படைக்கும் இளம் நிதித்துறை முகவராக வேலை செய்வதுபோல் நடித்ததாக நம்பப்படுபவர். இத்தகவல் விசாரணையில் தெரிய வந்தது.

தான் பெற்றுக்கொண்ட பொருள்களை அவர் மலேசியாவுக்குக் கொண்டு சென்றதாகக் கருதப்படுகிறது என்று காவல்துறை வெள்ளிக்கிழமை (மே 1) அறிக்கை மூலம் தெரிவித்தது. மேலும் அவர், போலியான நிறுவன அடையாள அட்டையைக் கொண்டு தான் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அதிகாரியாக நடித்து ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையிடம் புகார்

பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 29) தங்களிடம் புகாரளித்ததாகக் காவல்துறையினர் கூறினர்.

எம்1 சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் தன்னைத் தொடர்புகொண்டதாக அந்த பாதிக்கப்பட்டவர் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்டவரின் கைப்பேசித் தொடர்பு, கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குவது தொடர்பான விசாரணையில் சம்பந்தப்பட்டிருந்ததாகப் பாதிக்கப்பட்டவரிடம் கூறப்பட்டிருந்தது.

தான் நிரபராதி என்பதை ‘நிரூபிக்க’ அந்த ஆடவர் ரொக்கம், தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க பொருள்களை மோசடிக்காரர் என்று நம்பப்படுபவரிடம் ஒப்படைத்திருக்கிறார். அவர் ஒப்படைத்தவற்றின் மொத்த மதிப்பு சுமார் 140,000 வெள்ளி.

மோசடி மேற்கொண்டதாக நம்பப்படும் ஆடவர், ஏமாற்றுச் செயல்களின்போது போலித் தலைமுடியை (wig) அணிந்திருந்ததாக நம்பப்படுகிறது என்று காவல்துறை கூறியது.

சந்தேக நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் போலி தலைமுடி.
சந்தேக நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் போலி தலைமுடி. - படம்: சிங்கப்பூர் காவற்படை

விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 30) கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மலேசியாஏமாற்றுகள்ளப்பணம்எம்1