மரினா சவுத் பியரில் கப்பல் ஒன்றைச் சுத்தம்செய்துகொண்டிருந்தபோது படகின் சுழலியில் சிக்கிக்கொண்ட 22 வயது மலேசிய முக்குளிப்பாளர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜூன்18ஆம் தேதி, பிற்பகல் 2.15 மணி அளவில் 31 மரினா கோஸ்டல் டிரைவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அந்த முக்குளிப்பாளர் துணை முக்குளிப்புப் படகின் சுழலி ஒன்றில் சிக்கிக்கொண்டதாக மனிதவள அமைச்சின் பேச்சாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோது கூறினார்.
‘டைவ்-மரின் சர்வீசஸ்’ நிறுவனம் அந்த ஆடவரைப் பணியில் அமர்த்தியது. அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாகப் பேச்சாளர் சொன்னார்.
மனிதவள அமைச்சு சம்பவத்தை விசாரித்துவருகிறது. அனைத்து முக்குளிப்பு நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அமைச்சு அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அந்த முக்குளிப்பாளர் சுயநினைவின்றி இருந்ததாகக் காவல்துறை கூறியது.
சந்தேகப்படும்படி எதுவும் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவில்லை என்றும் அது சொன்னது.

