3,480 மின்சிகரெட் கருவிகளுடன் பிடிபட்ட மலேசியர்களுக்குச் சிறைத்தண்டனை

3,480 மின்சிகரெட் கருவிகளுடன் பிடிபட்ட மலேசியர்களுக்குச் சிறைத்தண்டனை

2 mins read
03b1f540-a20b-4a99-b0f4-3c4f408feb45
மின்சிகரெட் கருவிகளுடன் மலேசியாவிலிருந்து கார் மூலம் ஆடவர் இருவர் சிங்கப்பூருக்குள் நுழைந்தனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்குள் 3,480 மின்சிகரெட் கருவிகளைக் கொண்டுவந்த மலேசிய ஆடவர் இருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மலேசியாவிலிருந்து அந்தக் கருவிகளைக் காரில் வைத்துக் கொண்டுவந்த இருவரும் உட்லண்ட்ஸ் குடிநுழைவு, சோதனைச்சாவடியில் 2025 ஜூன் மாதம் பிடிபட்டனர்.

அவர்களில் ஒருவரான 22 வயது முகமது ஹைக்கல் சைனிக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 5) 18 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூருக்குள் 2,800 ‘போட்’ கருவிகளையும் 680 ‘கார்ட்ரிட்ஜ்’களையும் கொண்டுவந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு உடந்தையாக இருந்த 21 வயது முகம்மது முஸ்ரேக்கு 20 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆடவர் இருவரும் ‘டின்’ அல்லது ‘ஃபெய்’ என்று அறியப்படும் மற்றோர் ஆடவருடன் இணைந்து செயல்பட்டதாகச் சுகாதார அறிவியல் ஆணைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

அந்தச் சம்பவத்துக்கு முன்னரே ஹைக்கலும் முகம்மது முஸ்ரேயும் வேறொரு சந்தர்ப்பத்தில் மின்சிகரெட் கருவிகளுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆனால், அது எப்போது நடந்தது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

சிங்கப்பூருக்குள் அச்சமயத்தில் பிடிபடாமல் நுழைந்த இருவரும் குறிப்பிட்ட ஒரு வீட்டு முகவரிக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டனர்.

அங்கு, ‘டின்’ அனுப்பிய புகைப்படத்தைக் கொண்டு சட்டவிரோதமாகக் கொண்டுவந்த மின்சிகரெட் கருவிகளை லாரி ஒன்றில் அவர்கள் ஏற்றினர்.

அவ்வாறு செய்ததற்காக முகம்மது முஸ்ரேக்கு 550 ரிங்கிட்டும் ஹைக்கலுக்கு 150 ரிங்கிட்டும் வழங்கப்பட்டன.

அதேபோல இரண்டாவது முறையும் செய்தால் 1,100 ரிங்கிட் வழங்கப்படும் என்று முகம்மது முஸ்ரேயிடமும் 100 ரிங்கிட் வழங்கப்படும் என்று ஹைக்கலிடமும் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி, 3,480 மின்சிகரெட் கருவிகள் அடங்கிய எட்டுப் பெட்டிகளைக் காரில் வைத்த ‘டின்’, ஜோகூரில் உள்ள டிசாருவில் முகம்மது முஸ்ரேயை ஏற்றிக்கொண்டார். அங்கிருந்து பாசிர் கூடாங்கில் ஹைக்கலை ஏற்றிக்கொண்டு ஜோகூர் சுங்கச்சாவடியை நோக்கி ‘டின்’ சென்றார்.

பின்னர் அருகிலிருந்த பெட்ரோல் நிலையத்தில் ‘டின்’ இறங்கினார். அதையடுத்து, முகம்மது முஸ்ரே, ஹைக்கலுடன் சிங்கப்பூருக்குள் காரை ஓட்டி வந்தார்.

குறிப்புச் சொற்கள்