கார்மீது மலம்போல் தோன்றிய பொருளை வீசியதற்காக 52 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இச்சம்பவம் இம்மாதம் 20ஆம் தேதி லெவண்டர் சாலைப் பகுதியில் இடம்பெற்றது.
463 கிராஃபர்ட் லேனில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் காலை 9.45 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அவ்வாகனத்தின் மூன்று புகைப்படங்களைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார் திரு ஜெரமி சீ, 47 என்ற ஆடவர்.
“கொடுமை! கார்மீது உண்மையிலேயே மலம் வீசப்பட்டுள்ளது,” என்று அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
காரின் முன்பக்கக் கண்ணாடித் துடைப்பானுக்கு (wiper) அடியில் ஒரு துண்டுக்குறிப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில், ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரை வசைமாரி பொழிந்ததுடன், அவர் தமது மொத்த குடும்பத்தையும் சீர்குலைத்துவிட்டதாக எழுதப்பட்டிருந்தது.
காலை 9.30 மணியளவில் அருகிலுள்ள ஓர் உணவு நிலையத்திற்குச் சென்றபோது தான் அக்காரைக் கண்டதாக திரு சீ கூறினார்.
காரிலிருந்து கெடுமணம் வீசியது என்றும் அக்காரின் ஓட்டுநர் அருகில் தென்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர், ஆடவர் ஒருவர் கையில் சாவியுடன் அக்காரை நோக்கிச் சென்றதைத் தான் கண்டதாக அவர் கூறினார்.
“அவர் அதிர்ச்சியடைந்ததை அவரது முகமே காட்டியது,” என்றார் திரு சீ.
பின்னர் காவல்துறையினர் வரும்வரை அக்காரிலேயே அவர் அமர்ந்திருந்தார் என்றும் திரு சீ சொன்னார்.