ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருந்தது உட்படப் பல குற்றங்களுக்காக 50 வயது ஆடவர் ஒருவர் பூகிஸ் வட்டாரத்தில் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 19) கைது செய்யப்பட்டார்.
பூகிஸ்+ கடைத்தொகுதி அமைந்துள்ள 201 விக்டோரியா சாலையிலிருந்து பிற்பகல் 3.05 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீள நிறச் சட்டையும் அடர் நிறக் காற்சட்டையும் அணிந்திருந்த ஆடவரைக் காவல்துறையினர் சாம்பல் நிற வாகனத்தில் அழைத்துச் சென்றனர் எனச் சீன நாளேடான லியான்ஹ சாவ்பாவ் தெரிவித்தது.
அந்த வாகனத்தில் வைத்து அந்த ஆடவரிடம் அவர்கள் சோதனை நடத்தியதாகவும் அது மேலும் கூறியது.
பின்னர், அந்த நபரை ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருந்தது, குற்றச்செயலில் ஈடுபடுவேன் என மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்தனர். அவரிடமிருந்து ‘நக்கல் டஸ்டர்’, இரண்டு கத்திகள் ஆகிய ஆயுதங்களையும் கைப்பற்றினர்.
மேலும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை கூறியது.
விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

