நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஃபுனான் மால் கடைத்தொகுதியின் டாக்சி நிறுத்துமிடத்துக்கு அருகே கட்டைத்தூண் ஒன்றில் மோதிய காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த 31 வயது ஆடவர், மது அருந்திவிட்டு வாகனமோட்டியதற்காகவும் இதர போக்குவரத்துக் குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
கார், லாரி, டாக்சி ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்து குறித்து ஜூன் 24ஆம் தேதி காலை 6.55 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
சம்பவத்தில் தொடர்புடைய லாரியின் 61 வயது ஓட்டுநர் விசாரணையில் உதவிவருவதாக அது குறிப்பிட்டது.
லாரியுடன் மோதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் பின்னர் சுழன்று, டாக்சி நிறுத்துமிடத்தில் இருந்த கட்டைத்தூண் மீதும் அங்கு நின்றுகொண்டிருந்த டாக்சி மீதும் மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சீனமொழி நாளேடான சாவ்பாவிடம் கூறினார்.
விபத்து தொடர்பில் வெளியான படங்கள், மெர்சிடிஸ் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்ததைக் காட்டுகின்றன.
சம்பவத்தில் ஒருவர் லேசாகக் காயமடைந்ததாகவும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவதை மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

