பூன் கெங்கின் மெக்நாயர் சாலையில் உள்ள இரண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் வாசல்களிலும் கதவுகளிலும் மே 23ஆம் தேதி சிவப்புச் சாயம் ஊற்றியதாக நம்பப்படும் 36 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடன்முதலையாகத் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படும் ஆடவர் புகார் அளிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் கைதானதாக சிங்கப்பூர் காவல்துறை சொன்னது.
காவல்துறை வழங்கிய புகைப்படங்களில் வீடுகளின் வாசலில் ரத்த நிறத்தில் உள்ள சிவப்புச் சாயம் ஊற்றப்பட்டுள்ளது.
வாங்கிய கடனைத் திரும்பத் தரும்படியும் தம்மை தொடர்புகொள்ளும்படியும் மிரட்டல் விடுக்கும் பாணியில் கடன்காரரின் துண்டுச் சீட்டும் சம்பவ இடத்தில் இருந்தது.
கைதான ஆடவர்மீது, கடன் வழங்குவோர் சட்டம் 2008இன் கீழ் சனிக்கிழமை (மே 24) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
“காவல்துறை கடன்முதலைகள் தரும் தொந்தரவுகளைப் பொறுத்துக்கொள்ளாது. பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது, பொதுமக்கள் பாதுகாப்புக்கு இடையூறாக இருப்பது ஆகியவற்றை எதிர்த்து சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று காவல்துறை குறிப்பிட்டது.
கடன்முதலை துன்புறுத்தலுக்காக முதல் முறை $5,000 முதல் $50,000 வரையிலான அபராதம், ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனை, அதிகபட்சம் ஆறு பிரம்படிகள் விதிக்கப்படக்கூடும்.