ஈசூன் இண்டஸ்ட்ரியல் பார்க் ‘ஏ’ல் சிங்கப்பூர்ச் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் 33 வயது இந்திய நாட்டவர் பிடிபட்டுள்ளார்.
ஏப்ரல் 3ஆம் தேதி, லாரி ஒன்றிலிருந்து அந்த ஆடவர் இறங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அதிகாரிகள், அந்த லாரியைச் சோதனை செய்தபோது சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அத்துடன், 10,150 வெள்ளி ரொக்கமும் அகப்பட்டது. தீர்வை செலுத்தப்படாத சிகரெட் பொட்டலங்களின் விற்பனையிலிருந்து அந்தத் தொகை பெறப்பட்டதாக நம்பப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து செயல்படும் நண்பர் ஒருவர், கைதான ஆடவரை இந்த வேலையில் சேர்த்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவர்களது செயல்பாடுகளின் மூலம் ஏறத்தாழ 216,636 வெள்ளி மதிப்பிலான பொருள், சேவை வரி ஏய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தீர்வை செலுத்தப்படாத பொருள்களை வாங்குவது, விற்பது, விநியோகிப்பது, வைத்திருப்பது, வர்த்தகம் செய்வது ஆகியவை கடுமையான குற்றங்கள்.
தவிர்க்கப்பட்ட வரிப்பணத்திற்கு 40 மடங்கு ஈடான அபராதமோ ஆறு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ குற்றவாளிகளுக்கு விதிக்கப்படலாம்.

