நண்பரைக் கடுமையாகத் தாக்கி அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த குற்றத்திற்காக 55 வயது எங் சீ ஹோங்குக்கு இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதச் சிறைத் தண்டனையும் $3,000 அபராதமும் அனைத்து வகையான வாகனங்கள் ஓட்ட இரண்டு ஆண்டுகள் தடையும் வியாழக்கிழமை (அக்டோபர் 10) விதிக்கப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்தையும் மற்றொரு சம்பவத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தையும் அவர் புதன்கிழமை (அக்டோபர் 9) ஒப்புக்கொண்டார்.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி, குடிபோதையில் இருந்த வியட்னாமைச் சேர்ந்த 38 வயதான தனது நண்பரின் நடத்தை பிடிக்காததால் அவரது முகத்தில் ஹோங் குத்தியதாகக் கூறப்படுகிறது. பின்பக்கமாக சாய்ந்த நண்பரின் தலை கான்கிரீட் தரையில் மோதியதால் அவர் படுகாயமடைந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நான்கு நாள்களுக்குப் பிறகு ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.


