கடந்த டிசம்பர் மாதம் பார்ட்லி ரோடு ஈஸ்ட்டில் போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டியதாக நம்பப்படும் 25 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதாக புதன்கிழமை (பிப்ரவரி 25) அவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்று காவல்துறை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அந்த ஆடவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகிறது. அன்று அதிகாலை 12.50 மணியளவில் தெம்பனிஸ் அவென்யூ 10ஐ நோக்கி பார்ட்லி ரோடு ஈஸ்ட்டில் கறுப்பு கார் ஒன்று போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் சென்றுகொண்டிருந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
போக்குவரத்து கேமராக்களின் உதவியுடன் போக்குவரத்துக் காவல்துறை அந்த ஓட்டுநரை அடையாளம் கண்டது. அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதன் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மறுபடியும் இக்குற்றத்தைப் புரிவோருக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம், ஈராண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

