திரு டான் டெக் லாய் என்பவருக்கு மூன்று மகன்கள். அவர் தன் மூன்று சொத்துகளை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுக்க முடிவுசெய்து கடந்த 1976ஆம் ஆண்டு சீட்டுக் குலுக்கிப் போட்டார்.
மூத்த மகனான டான் டியன் செக், 68, என்பவருக்கு குலிமார்ட் ரோட்டில் இருக்கும் ஒரு சொத்து கிடைத்தது.
இரண்டாவது புதல்வரான டான் ஹியன் சாய் என்பவருக்கு ஜாலான் செடாப்பில் ஒரு சொத்து கொடுக்கப்பட்டது. கடைசி மகனான டான் டியென் சாய், 65, என்பவருக்கு ஒன் ட்ரி ஹில் சொத்து கிடைத்தது.
மூன்றாவது மகனுக்குக் கிடைத்த சொத்தைவிட முதல் மகனுக்குக் கிடைத்த சொத்து மதிப்பு குறைவாக இருந்ததால் ஒன் ட்ரி ஹில் சொத்தில் 10 விழுக்காட்டை 1977ஆம் ஆண்டில் தந்தை மூத்த மகனுக்குக் கொடுத்தார்.
அதனை அடுத்து, 2000 ஆம் ஆண்டில் ஒன் ட்ரி ஹில் சொத்தில் தனக்கு இருந்த 10% பாத்தியதையைக் கடைசித் தம்பிக்கு மாற்றித் தருவதற்கான மூன்று பத்திரங்களில் மூத்த புதல்வர் கையெழுத்திட்டார்.
அதனை அடுத்து ஒன் ட்ரி ஹில் சொத்துக்குக் கடைசித் தம்பியே முழு உரிமையாளரானார். இதற்காக மூத்தவருக்கு $320,000 கொடுக்கப்பட்டதாக அந்தப் பத்திரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், அந்தச் சொத்து 2017ஆம் ஆண்டு $9.3 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
அந்தத் தொகையில் 10% தனக்குச் சேர வேண்டும் என்று மூத்தவர் வழக்குத் தொடுத்தார்.
கடைசித் தம்பிக்குப் பண நெருக்கடி ஏற்பட்டுவிட்டதால் தம்பிக்கு உதவுவதற்காகவே தான் 2000ஆம் ஆண்டில் தன் 10% பங்கை தம்பிக்கு எழுதிக் கொடுத்ததாக அவர் வாதிட்டார்.
வீட்டை விற்று 10% தொகையைக் கொடுத்துவிடுவதாக தம்பி உறுதி கூறியதை அடுத்தே தான் தனது 10% பங்கை அவருக்குக் கொடுத்து பத்திரங்களில் கையெழுத்திட்டதாகவும் மூத்தவர் வாதாடினார்.
பத்திரங்களில் தனக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் $320,000 தொகையைத் தான் பெறவே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வழக்கில் பிரதிவாதியான கடைசி சகோதரர், தன்னுடைய தந்தை சொன்னதால்தான் தன் அண்ணன் அவரின் 10 விழுக்காட்டு பாத்தியதையைத் தன் பெயருக்கு மாற்றிக் கொடுத்ததாகவும் அதற்காக தன் சார்பில் அண்ணனுக்குப் பணத்தை தன் தந்தை கொடுத்துவிட்டதாகவும் எதிர் வழக்காடினார்.
இந்த வழக்கு விசாரணையில் அந்த சகோதரர்களின் ஒன்றுவிட்ட சகோதரியான திருவாட்டி டான் பீ லீ என்பவரும் ஒலிப்பதிவு மூலம் சாட்சியம் அளித்தார்.
அனைத்தையும் விசாரித்த உயர் நீதிமன்றம், மூத்தவருக்கு அவருடைய தந்தையே உரிய பங்கை கொடுத்துவிட்டார். அதற்குப் பிறகுதான் அந்த மூத்தவர் பத்திரங்களில் கையெழுத்திட்டார் என்று தீர்ப்பில் தெரிவித்தது.
ஆகையால் இந்த வழக்கில் பிரதிவாதியான தம்பி வாய்மொழியாகத் தெரிவித்த உறுதியின் அடிப்படையில், தன் பங்கை அண்ணன் மாற்றிக் கொடுக்கவில்லை என்ற நீதிமன்றம், மூத்தவர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
தந்தை திரு டான் டெக் லாய் 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் மரணம் அடைந்தார்.