சீனாவிலிருந்து சட்டவிரோதமாக 180 கிலோவுக்கும் அதிகமான இறைச்சி, கடல் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்த சிங்கப்பூர் ஆடவருக்கு $15,000 அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.
இதைச் சிங்கப்பூர் உணவு அமைப்பும் (எஸ்எஃப்ஏ), குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும்(ஐசிஏ) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இந்தக் குற்றத்தைச் செய்தவர் 51 வயதான மேன் வீ காங். அவரிடம் செல்லுபடியாகும் எஸ்எஃப்ஏ உரிமம் இல்லை என எஸ்எஃப்ஏ தெரிவித்தது.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் பல்வேறு வகையான பொருள்களைக் கொண்ட கொள்கலனின் சோதனைப் படங்களில் சில முரண்பாடு இருப்பதை ஐசிஏ அதிகாரிகள் கண்டறிந்தனர்.
உடனே, அதிகாரிகள் அந்தக் கொள்கலனைச் சோதனையிட்டனர். அப்போது, சரியான உரிமமின்றிச் சீனாவிலிருந்து இறைச்சி, கடல் உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
இது குறித்து அமைப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
21 பாண்டான் அவென்யூவில் இருக்கும் உணவுப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கை எஸ்எஃப்ஏ அதிகாரிகள் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி ஆய்வு செய்தனர். அங்கிருந்து 180 கிலோவுக்கும் அதிகமான இறைச்சி, கடல் உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.