பொத்தோங் பாசிர் பெருவிரைவு ரயில் நிலையத்தின் பயணிகள் சேவை நிலையத்திற்கு அருகே சிறுநீர் கழித்த சோ ஹொங்வெய் எனும் ஆடவருக்குப் புதன்கிழமை (பிப்ரவரி 26) $2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பொது இடத்தில் தொல்லை விளைவித்த குற்றத்துக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
செங்காங்கில் வசிக்கும் அந்த 57 வயது ஆடவர் ஜனவரி 13ஆம் தேதி, சைனாடவுனில் மது அருந்திய பிறகு பொங்கோல் கோஸ்ட் நோக்கிச் செல்லும் வடகிழக்குப் பாதை ரயிலில் பயணம் செய்தார்.
அவருக்குச் சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால் பொத்தோங் பாசிர் நிலையத்தில் இறங்கினார். இரவு 7.30 மணியளவில் அந்த நிலையத்தின் பயணிகள் சேவை நிலையத்துக்கு அருகே அவர் சிறுநீர் கழித்தார்.
நிலைய ஊழியர்களின் மேலாளர் அவரது செயலைக் கண்டதாகக் கூறப்பட்டது.
மது போதைக்குத் தான் அடிமை என்று கூறிய ஆடவர், சம்பவ நாளில் மது அருந்தியதால் அவ்வாறு நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.
மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபட லாப நோக்கற்ற அமைப்பின் உதவியை நாடியிருப்பதாகவும் சம்பவத்துக்குப் பிறகு பொத்தோங் பாசிர் நிலையத்திற்குச் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அவர் சொன்னார்.
தெரிந்தே பொது இடத்தில் தொல்லை விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனையோ 2,000 வெள்ளி அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.