லாவண்டர் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
அந்த 42 வயது நபர் சுயநினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தன்னை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் தனக்குத் தானே அவர் காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக நம்பப்படுகிறது.
சனிக்கிழமை (ஜூலை 11) காலை 9.40 மணியளவில் 114 லாவண்டர் ஸ்திரீட்டில் நடந்த இந்தச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் அங்கு விரைந்தனர்.
அப்போது, காயமடைந்த நபரை அவர்கள் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தனர்.
இச்சம்பவம், ‘சிடி ஹப் 2’ என்ற தொழில், வணிக வளாகத்தில் நடைபெற்றது.
சம்பவம் நடந்த இடத்திற்கு காலை 11.00 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சென்றபோது காவல் துறையினர் பாதுகாப்புத் தடுப்புகளைப் போட்டு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். குறைந்தது ஆறு காவல் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக இருந்தனர்.
அதே சமயம், அந்தப் பகுதியில் அமர்ந்திருந்த பெண் ஒருவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது.

