சாங்கி வில்லேஜில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) இரவு லாரி மோதி 30 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
தெலுக் பாக்கு சாலை - சாங்கி வில்லேஜ் சாலை சந்திப்பில் நேர்ந்த அவ்விபத்து குறித்து இரவு 10.55 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
லாரி மோதிய அந்த நடையர் நினைவிழந்த நிலையில் சாங்கி பொதுமருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் அங்கு அவரது உயிர் பிரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் 37 வயது லாரி ஓட்டுநரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
முந்தைய பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு 2025ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் அதிக உயிர்கள் பறிபோயின. சாலை விபத்துகளில் சிக்கி 2016ஆம் ஆண்டு 141 பேர் மாண்ட நிலையில், 2025ஆம் ஆண்டு அவ்வெண்ணிக்கை 149ஆக உயர்ந்தது; 2024ல் 142 உயிரிழப்புகள் பதிவாயின.
அதுபோல, 2024ஆம் ஆண்டு 139 சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் பதிவாயின. அந்த எண்ணிக்கை 2025ல் 147ஆகக் கூடியது.
அத்துடன், 2024ல் 9,342 பேர் சாலை விபத்துகளில் காயமடைந்த நிலையில், அதற்கடுத்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 9,955ஆக அதிகரித்தது.

