ஆடவர் ஒருவர் தம் ஐந்து வயது மகளை பல மாதம் துன்புறுத்திக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அந்தச் சிறுமி அவளுடைய தம்பியுடன் கழிவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவளது சகோதரரின் அடையாளத்தைப் பாதுகாக்க அந்த 43 வயது ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. சிறுமியின் சகோதரர் அந்த ஆடவர் எதிர்நோக்கும் மற்றக் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியாக அமையலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. ஆடவர்மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது பிரம்படிகளுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
மகளையும் மகனையும் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குக் கழிவறையில் அடைத்து வைத்தது, மகன் இரண்டு வயதில் இருந்தபோது அவனைக் குத்தியது உள்ளிட்ட மேலும் 25 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார். இருப்பினும், அவர் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குவதால் இந்தக் குற்றச்சாட்டுகள் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மாண்ட சிறுமியும் அவளது சகோதரரும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் முதல் திருமணத்தில்மூலம் பிறந்த பிள்ளைகள் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். விவாகரத்தானதும் அந்த ஆடவர் மீண்டும் திருமணம் செய்துகொண்டார்.
2014ஆம் ஆண்டில் அந்த ஆடவரின் குழந்தைகள், பிள்ளை வளர்ப்புப் பராமரிப்பு சேவையில் (foster care) சேர்க்கப்பட்டனர். இருப்பினும், 2015ஆம் ஆண்டில் அவர்கள் மீண்டும் அந்த ஆடவரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பிள்ளைகள் இருவரையும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் அவர்கள் கழிவறையிலேயே இரவுகளைக் கழித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை தொடர்கிறது.

