நியூயார்க்: நியூயார்க்கின் வெஸ்ட்பரி பகுதியில் காந்த அதிர்வு அலை வரைவு (எம்ஆர்ஐ) அறையில் நுழைந்த ஆடவர் ஒருவர், தனது கழுத்திலுள்ள சங்கிலியால் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டார்.
தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த ஆடவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரிதாக இருந்த அந்தச் சங்கிலியை அணிந்திருந்த அந்த ஆடவர், அனுமதியின்றி அந்த அறைக்குள் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடற்பாகங்களின் நுட்பமான படங்களைத் தயாரிக்க காந்த, வானொலி அலைக்கற்றைகளை எம்ஆர்ஐ இயந்திரங்கள் பயன்படுத்துகின்றன.
எம்ஆர்ஐ இயந்திரத்தின் காந்த அலை, சக்கர நாற்காலியைத் தூக்கி வீசும் அளவுக்கு வலுவாக இருப்பதாக தேசிய உயிரியல் மருத்துவக் கழகம் தெரிவித்தது.
எம்ஆர்ஐ இயந்திரத்திற்குள் நுழைவதற்கு முன் அணிகலன்களையும் தோடுகளையும் அகற்றும்படி நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மருத்துவ தேவைக்காக இரும்பு போன்ற உலோகங்களைத் தங்கள் உடலுக்குள் பொருத்தியுள்ளவர்கள் எம்ஆர்ஐ வருடிகள் அருகில் செல்லக்கூடாது என்று அந்தக் கழகம் தெரிவித்தது.
2001ல் உலோகத்தாலான உயிர்வாயுத் தொட்டி எம்ஆர்ஐ இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்ட சம்பவம் ஒன்றில் 6 வயதுச் சிறுவன் இறந்தார்.

