சென்ற ஆண்டு (2023) ஈசூனில் உள்ள காப்பிக்கடை ஒன்றில் 60 வயதுப் பெண்ணைக் கத்திமுனையில் பிணைபிடித்த ஆடவர், போதைப்பொருள் உட்கொண்டது, துன்புறுத்தல், ஆட்கடத்தல் ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகளை மே 28ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
43 வயதாகும் முகமது ஃபைஸல் முகமது அரிஃபிற்கு ஜூன் 19ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.
2023 ஜனவரி 9ஆம் தேதி, ஈசூன் ரிங் ரோட்டின் புளோக் 108ல் அந்த மாதின் கழுத்தில் கத்தியை வைத்து ஃபைஸல் மிரட்டினார்.
சம்பவத்தின்போது தான் ‘ஐஸ்’ போதைப்பொருளை உட்கொண்டிருந்ததாக மே 28ஆம் தேதி, ஃபைஸல் நீதிமன்றத்தில் கூறினார்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அப்போது மேற்கொண்ட சிறுநீர்ப் பரிசோதனை முடிவு அதை உறுதிப்படுத்தியது.
ஃபைஸல் அந்தப் பெண்ணைப் பிணைபிடித்த சம்பவம் தொடர்பில் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளிகள், காவல்துறையின் ‘இஆர்டி’ எனப்படும் அவசரகால நடவடிக்கைக் குழு அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்ததைக் காட்டின.
இந்த ‘இஆர்டி’ குழு அதிகாரிகள், பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடுவோரையும் துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்போர் போன்றோரையும் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள்.
அதிகாரிகள் ஃபைஸலின் கையிலிருந்த ஆயுதத்தைப் பறித்து, அவரைக் கைது செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தில் கத்திக் கீறல்கள் காணப்பட்டன.
ஃபைஸல் பின்னர் மனநலக் கழகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
ஆட்கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றோ சிலவோ அனைத்துமோ விதிக்கப்படலாம்.


