சிங்கப்பூருக்குள் ஆளில்லா வானூர்தியில் போதைப்பொருள் கடத்திய ஹெல்மி ஷாரெஸா ஷாரோம் எனும் ஆடவருக்கு 28 ஆண்டு, மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு 18 பிரம்படிகளும் கொடுக்கப்படும் என்று வியாழக்கிழமை (அக்டோபர் 16) தீர்ப்பளிக்கப்பட்டது.
கொவிட்-19 பெருந்தொற்று முடக்கநிலையின்போது மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் போதைப்பொருளைக் கடத்த ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்த அவர் திட்டமிட்டார்.
கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்ற ஆடவர் மூவருக்கும் ஏற்கெனவே 12 ஆண்டுமுதல் 14 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவரான முஹமது ஷாரெஸா முஹம்மது ஸூரி ஆளில்லா வானூர்தியை அனுப்பினார். இரண்டாம் நபரான முஹமது ஹஸ்ரி அப் ரஹிம் எல்லாம் திட்டமிட்டபடி நடக்கின்றனவா என்பதைக் கண்காணித்தார். முஹம்மது நஸ்ரி ஜுமாட் எனும் மூன்றாமவர் போதைப்பொருளைப் பையில் வைத்து வானூர்தியுடன் பொருத்தினார்.
ஹஸ்ரி, நஸ்ரி இருவருக்கும் ஆளுக்கு 10 பிரம்படிகள் கொடுக்கும்படியும் தீர்ப்பளிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான 34 வயது ஹெல்மி மட்டுமே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக வழக்கு விசாரணையைக் கோரினார்.
சென்ற மாதம் (செப்டம்பர் 2025) 4ஆம் தேதி சிங்கப்பூருக்குள் அவர் போதைப்பொருள்களை இறக்குமதி செய்தது நிரூபிக்கப்பட்டது. அத்துடன் அவர் இங்கும் நாட்டுக்கு வெளியிலும் போதைப்பொருள் உட்கொண்டதும் வெளிச்சத்திற்கு வந்தது.