ஜூ செங் ரோட்டில் உள்ள வீவக வீட்டிற்குத் தீமூட்டிய ஆடவருக்கு மருத்துவப் பராமரிப்புத் தேவைப்பட்டதால் திங்கட்கிழமை (ஜூலை 6) கட்டாய மருத்துவ சிகிச்சைக்கான உத்தரவு (எம்டிஓ) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லுயு ஸெயுவான், 44, என்ற அந்த ஆடவர், குற்றம் நிகழ்ந்தபோது தம்மை மறக்கும் பிரம்மை சார்ந்த கோளாற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டிருந்தது.
கட்டாய மருத்துவச் சிகிச்சைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர், சிறைத் தண்டனை அனுபவிப்பதற்குப் பதிலாக உடல்நலக் கோளாற்றைச் சரிசெய்ய சிகிச்சைக்குச் செல்ல வேண்டியது கட்டாயம்.
தீமூட்டிச் சேதம் விளைவித்த ஒரு குற்றச்சாட்டை அந்த ஆடவர் கடந்த ஜூன் மாதம் ஒப்புக்கொண்டார்.
தம்மைத் துன்புறுத்துவதற்காகத் தமது அண்டை வீட்டார் கூரை வழியாக லேசர் கதிர்களைச் செலுத்தியதாகவும், மின்சாரத்தைப் பாய்ச்சியதாகவும் லியூ நம்பியதாக இதற்கு முன்னர் நடைபெற்ற விசாரணைகளின்போது நீதிமன்றம் கேட்டறிந்தது.
அந்தச் செயலுக்குப் பதிலடியாக மே 4ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் அப்பர் அல்ஜுனிட் ரோட்டுக்கு அருகிலுள்ள ஜூ செங் ரோடு, புளோக் 14ன் 18வது மாடியிலுள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில் லியு அடுப்புக்கரியைப் பற்றவைத்ததாகக் கூறப்பட்டது.
உலோகச் சட்டம் ஒன்றின்மீது பானையை வைத்து மேலும் சில கரிகளை அவர் எரித்தார். அதனால் திரைச்சீலையில் பற்றி எரிந்த தீ வீடு முழுவதும் பரவியது.
தீயை அணைப்பதில் தோல்வி கண்ட லியு, உடனே வெளியேறுமாறு அண்டை வீட்டாரைக் கேட்டுக்கொண்டதோடு சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவித்தார்.
அந்தச் சம்பவத்தில் அவரது பெற்றோர் உள்ளிட்ட பலர் புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்டனர். அத்துடன், ஏறத்தாழ $100,000 மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
கைது செய்யப்பட்ட லியு மனநலக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

