நடுக்கடலில் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட கப்பல் ஊழியரை மீட்டது ஆகாயப்படை

நடுக்கடலில் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட கப்பல் ஊழியரை மீட்டது ஆகாயப்படை

1 mins read
d27f4ddb-d756-4a36-9ff6-41b29a37466c
கப்பல் ஊழியரை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட சிங்கப்பூர் ஆகாயப்படை மீட்புக்குழுவினர், அவரை மருத்துவமனைக்கு அனுப்ப அவசர மருத்துவ வாகனத்துக்குக் கொண்டுசெல்கின்றனர். - படம்: தற்காப்பு அமைச்சு

நடுக்கடலில் கப்பல் ஒன்றில் இருந்த ஊழியருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஆகாயப்படை அவரை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டது. செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) பிற்பகல் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

தகவல் கிடைத்தவுடன் H225M ரக ‘ரெஸ்கியூ 10’ ஹெலிகாப்டர் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஊழியர் வான்வழியாக மீட்கப்பட்டு, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது சுயநினைவுடனும் சீரான உடல்நிலையிலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம்மாதம் சிங்கப்பூர் ஆகாயப்படை மேற்கொண்ட இரண்டாவது பெரிய மீட்புப் பணி இதுவாகும். மக்களின் உயிரைக் காக்க 24 மணி நேரமும் தயார்நிலையில் இருக்கும் தனது அதிகாரிகள், மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பைச் சிங்கப்பூர் ஆகாயப்படை பாராட்டியுள்ளது.

முன்னதாக, பிப்ரவரி தொடக்கத்தில் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி நடைபெற்ற சமயத்திலும் இதேபோன்ற ஒரு வெற்றிகரமான மீட்புப் பணியை ஆகாயப்படை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்