மோசடிச் சம்பவங்களில் மீட்கப்பட்ட தொகையைப் பாதிக்கப்பட்டவர்களிடம் திருப்பித் தருவது தொடர்பான பல்வேறு பரிந்துரைகளை உள்துறை அமைச்சு பரிசீலித்து வருவதாக உள்துறைத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளார்.
பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் கேட்ட துணைக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அண்மைய பண மோசடிச் சம்பவங்களில் மீட்கப்பட்ட தொகையைக் கொண்டு, ‘மோசடியால் பாதிக்கப்பட்டவரிடம் மீட்கப்பட்ட தொகையைத் திருப்பிக் கொடுக்கும் நிதி’யை நிறுவுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்ததா என்று திரு கியாம் கேட்டிருந்தார்.
$3 பில்லியன் வெள்ளி (யுஎஸ் 2.2 பில்லியன் டாலர்) பண மோசடி வழக்கின் ஒரு பகுதியாக சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் பிப்ரவரி 26 அன்று கூறினார்.
கடந்த 2024 டிசம்பர் நிலவரப்படி, மொத்தம் 54 சொத்துகள், 33 வாகனங்கள், 11 மகிழ்மன்ற உறுப்பியம் ஆகியவை கலைக்கப்பட்டன. ரொக்கமற்றசொத்துக்களை கலைத்ததிலிருந்து கிடைக்கும் வருமானம் அரசாங்க ஒருங்கிணைக்கப்பட்ட நிதியில் செலுத்தப்படும் என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை மீட்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட நிதியை அமைப்பது செயல்பாட்டு சவால்களை ஏற்படுத்தும் என்று திருவாட்டி சன் கூறினார்.
எடுத்துக்காட்டாக, மோசடி தடுப்பு மையத்தால் மீட்கப்பட்ட பணம் அனைத்தும் மோசடிகளில் இருந்து வந்தவை என்பதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியாது.
மோசடிக் கும்பல்கள் பெரும்பாலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உட்பட பிற குற்ற வணிக வழிகளையும் செயல்படுத்துகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“மற்ற வகையான குற்றங்களுக்கும் பிற வருமானங்கள் இருக்கலாம். எனவே மற்ற வழிகளில் பாதிக்கப்பட்டவர்களும் அந்த வருமானத்தில் தங்களுக்கும் உரிமை இருப்பதாக உணரலாம்,” என்று அவர் சுட்டினார்.
மோசடிகளிலிருந்து மீட்கப்பட்ட பணம், மோசடிகளில் இழந்த தொகையில் ஒரு சிறு பகுதி என்று திருவாட்டி சுன் குறிப்பிட்டார்.
2024ல் குறைந்தது $1.1 பில்லியன் (யுஎஸ் 822 மில்லியன் டாலர்) மோசடிகளில் இழக்கப்பட்டது. சிங்கப்பூர் காவல்துறை 2024ல் $182 மில்லியனுக்கும் அதிகமான தொகையைத்தான் மீட்டுள்ளது. இதனால் நிகர இழப்பு $930 மில்லியன் ஆகும்.
“மீட்கப்பட்ட தொகையில், உண்மையில் கிடைக்கும் வருமானத்தைவிட அதிக உரிமை கோருபவர்கள் இருக்கப் போகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
மோசடி மீட்பு நிதி பற்றி மோசடிக்காரர்களுக்கு தெரிந்தால், அவர்கள் அதை மோசடி நடவடிக்கைகளில் கவர்ந்திழுக்க பயன்படுத்தலாம், பின்னர் நிதியிலிருந்து பணத்தை மீட்க முயற்சிக்கலாம் என்று திருவாட்டி சன் கூறினார்.
மோசடியில் ஏற்படும் இழப்பை வங்கி போன்ற நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் எந்த வகையில் பகிர்ந்துகொள்ளலாம் என்பதை விளக்கும் புதிய கட்டமைப்பு 2024 டிசம்பரில் அமைக்கப்பட்டது.

