கொவிட்-19 கிருமியின் ‘ஓமிக்ரான் எக்ஸ்பிபி’ திரிபு அதற்கு முந்தைய ‘டெல்டா’ திரிபைக் காட்டிலும் ஐந்து மடங்கு வீரியம் கொண்டது என்று பரவிய தகவல் குறித்துச் சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
அது பொய்யான தகவல் என்று அமைச்சு நேற்று முன்தினம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளது.
‘எக்ஸ்பிபி’ திரிபை மருத்துவப் பரிசோதனையில் கண்டறிவது கடினம் என்றும் ‘டெல்டா’ ரக கிருமித் திரிபைவிட அது அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது என்றும் அண்மையில் தகவல்கள் பரவின.
‘வாட்ஸ்அப்’ மூலம் பரவிய அந்தத் தகவலில் உண்மை இல்லை என்று அமைச்சு உறுதிப்படுத்தியது.
“அனைத்துலக அளவிலும் உள்ளூரிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ‘எக்ஸ்பிபி’ திரிபு ‘டெல்டா’ திரிபைக் காட்டிலும் வீரியம் குறைந்தது.
“அதனால் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.
“தற்போதைய கொவிட்-19 பரிசோதனைக் கருவிகள் அந்தத் திரிபு உள்ளிட்ட அனைத்து கொவிட்-19 கிருமிகளையும் கண்டறிய வல்லவை,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
கொவிட்-19 கிருமிப் பரவல் குறித்த ஆக அண்மைத் தகவல்களுக்கு சுகாதார அமைச்சின் இணையத்தளத்தை நாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.