சீனாவில் பணம் கிடைக்கவில்லை:சிங்கப்பூர் நிறுவனம்மீது குற்றச்சாட்டு

சீனாவில் பணம் கிடைக்கவில்லை:சிங்கப்பூர் நிறுவனம்மீது குற்றச்சாட்டு

1 mins read
சிங்கப்பூர் பணப்பரிமாற்ற நிறுவனத்தின் நிதி சீனாவில் முடக்கப்பட்டது
767edc98-7d6f-4bf1-b5ed-5e6855451a9f
சிங்கப்பூர் நாணய ஆணையம், சம்லிட் பணமாற்று நிறுவனத்தை அதன்மீது சுமத்தப்பட்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியது. - படம்: ஷின்மின் சீன நாளிதழ்

சிங்கப்பூரில் இயங்கும் சம்லிட் பணப் பரிமாற்ற நிறுவனத்தின் வழியாக சீனாவுக்கு அனுப்பப்பட்டப் பணம் அங்குள்ள அதன் வாடிக்கையாளர்களை சென்றடையவில்லை.

சீன அதிகாரிகள் அங்குள்ள அந்நிறுவனத்தின் அலுவலக நிதிகளை முடக்கிவைத்துள்ளதால் அதன்மூலம் யாரும் பணப்பரிவர்த்தனை செய்யமுடியவில்லை.

சம்லிட் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் மாலிக் சமீர் 36, இயக்குநர் நொவியாந்தி 45, ஆகிய இருவரும் அந்நிறுவனம் குறித்து எழுந்த புகார்களை விசாரிக்கத் தவறியதாக அவர்கள்மீது வியாழக்கிழமை (ஜூலை 9) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

சைனாடவுனில் உள்ள சம்லிட் நிறுவனம் அதன்மீது எழுந்த பாதிக்கப்பட்ட பல வாடிக்கையாளர்களின் புகார்களை விசாரிக்கும்படி 2024ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்) கேட்டுக்கொண்டது. ஆனால் சம்லிட் நிறுவனம் அதனைச் செய்யத் தவறியது.

நிதிச் சேவைகள், சந்தைகள் சட்டப்படி (எஃப்எஸ்எம்ஏ) அது ஒரு குற்றமாகும். சம்லிட் நிறுவனத்துடன் மாலிக்கும் நொவியாந்தியும் 17 குற்றச்சாட்டுகளை அச்சட்டப்படி எதிர்நோக்குகின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த மாலிக்மீது மொத்தம் 39 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் நீதித்துறைக்கு எதிராக செயல்பட்ட இரு குற்றங்களும் அடங்கும்.

சிங்கப்பூர் நாணய ஆணையம், காவல்துறையுடன் வியாழக்கிழமை ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டது.

அதில் சீனாவில் உள்ள சம்லிட் நிறுவன பயனாளிகளால் அங்குள்ள அலுவலக பிரதிநிதிகளுக்கு இங்கிருந்து அனுப்பப்பட்டப் பணத்தைப் பெற முடியவில்லை எனவும் சீன அதிகாரிகள் அதன் நிதிகளை முடக்கிவிட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சீனாவில் முடக்கப்பட்ட சம்லிட் நிறுவனத்தின் மொத்த நிதி பற்றியும் அதன் காரணம் குறித்தும் இரு அமைப்புகளும் தகவல்கள் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்