சட்டவிரோத கடன் தொழில் நடவடிக்கைகள் தொடர்பாக 158 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அவர்கள் 15 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். தீவு முழுவதும் நடத்தப்பட்ட வேட்டையில் இவர்கள் சிக்கினார்கள்.
தேடுதல் வேட்டை மே 29 முதல் ஜூன் 1 வரை நான்கு நாள்கள் நடைபெற்றது. மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஏழு காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் ஒன்றிணைந்து குற்றங்களைக் கண்டறியும் பணிகளில் ஈடுபட்டனர்.
நான்கு நாள் நடவடிக்கை தொடர்பாக காவல்துறை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பிடிபட்டவர்களில் 10 பேர் கடன் வாங்கியவர்களின் வீடுகளுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் 48 பேர் கடன் கொடுக்கும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்கீழ் உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
எஞ்சிய 100 பேரும் வங்கிக் கணக்கு திறந்து அதற்குரிய ஏடிஎம் அட்டைகளை சட்டவிரோத கடன் தொழில் நடத்துநர்களும் கொடுத்த சந்தேகத்தில் பிடிபட்டனர்.
அத்துடன் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண், இணைய வங்கியைப் பயன்படுத்துவதற்கான சாதனம் ஆகியவற்றையும் சட்டவிரோத கடன் தரும் நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக அவர்கள் அளித்ததாக 100 பேரிடம் விசாரணை தொடருகிறது.
உரிமம் இன்றி கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபடுவோர் பிடிபட்டால் நான்கு ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை அவர்களுக்கு விதிக்கப்படலாம்.
மேலும், $30,000 முதல் $300,000 வரையிலான அபராதமும் அதிகபட்சமாக ஆறு பிரம்படிகளும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படலாம்.
சட்டவிரோத கடன்முதலைகளுக்கு உதவியாக துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு $5,000 முதல் $50,000 வரையிலான அபராதமும் ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் மூன்று முதல் ஆறு வரையிலான பிரம்படிகளும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
உரிமம் இன்றி கடன் கொடுப்போருக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் பிடிபடுவோருக்கு உரிய தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்து உள்ளது.
அத்துடன், கடன் கொடுப்போருக்கு உதவியாக வங்கிக் கணக்கு தொடங்குவோர் அல்லது ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை அளிப்போருக்கும் தண்டனை உண்டு என்று காவல்துறை தெரிவித்துள்ளது.