புகார் அளிக்கக்கூடிய தளங்கள் வாயிலாக வேலையிடப் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் வேலையிடத்தில் மரணமடையும், கடுமையகக் காயமடையும் விகிதம் சென்ற ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்தது.
மனிதவள அமைச்சின் ‘ஸ்னேப்சேஃப்’ இணையவாசலில் சென்ற ஆண்டு 1, 505 புகார்கள் செய்யப்பட்டன. 2022ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 1,194 புகார்களைக் காட்டிலும் அது 26 விழுக்காடு அதிகம்.
‘ஸ்னேப்சேஃப்’ என்பது வேலையிடப் பாதுகாப்பு குறித்து புகார் அளிக்கும் மனிதவள அமைச்சின் இணையத் தளமாகும்.
மேம்பட்ட வேலையிடப் பாதுகாப்புக் கலாசாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பாதுகாப்பற்ற நடைமுறைகள் குறித்து புகார் செய்வதில் அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டதால், புகார்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
2022ஆம் ஆண்டிலும் 2023ஆம் ஆண்டிலும் செய்யப்பட்ட பத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட புகார்கள் பொதுமக்களிடமிருந்து வந்தன.
அவற்றில் பெரும்பாலானவை, கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கிடங்கு போன்ற அதிக ஆபத்தான துறைகள் சம்பந்தப்பட்டவை என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
சென்ற ஆண்டு, ஆக அதிகமான வேலையிட மரணங்களும் கடும் காயங்களும் ஏற்பட்ட மூன்று துறைகள் இவை.
தொடர்புடைய செய்திகள்